“சக்தி வழிபாடென்பது முக்திக்கான ஒரு யுக்தி மட்டுமல்ல; வாழுகின்ற வாழ்க்கையைத் தெளிவான புத்தியுடன் நடத்துவதற்கும் தான். அன்னையை பக்தி அன்போடு ஒன்றி வழிபடுபவர்கள், அன்றாடத் தேவைகளுக்கு கூட ஒருபோதும் திண்டாடத் தேவையில்லை. அன்னையின் அருளைப் பெற இப்புத்தகத்திலுள்ள துதிமாலைகள் துணைபுரிகின்றன.
“மாலை” என்பது சிற்றிலக்கியப் பிரபந்த வகைதனில் ஒன்று. இந்நூலில் மூன்று மாலைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மூன்று நூல்களும் மூகாம்பிகை ரூபமான பரதேவதை அம்பாளின் அருமை, பெருமைகளை விவரிக்கின்றன. மூன்று மாலைகளும் படிப்பவருக்கு முப்பெருஞ் செல்வங்களான வீரத்தையும் (வாராகி மாலை), பொருளையும் (பராபரை மாலை), கல்வி ஞானத்தையும் (ஆனந்த நாயகி மாலை) வழங்குகின்றன.