நைமிசாரண்யத்து தவசிரேஷ்டர்கள் சூத முனிவரிடம் லிங்க வழிபாட்டின் மேன்மையை விவரிக்குமாறு கேட்டுக் கொண்டதற்கு இணங்க சூதர் கூறியதே லிங்க புராணம் ஆகும். வியாச பகவான் எழுதிய பதினென் புராணங்களில் பதினொன்றாவதான லிங்க புராணம் இதன் மூலம் ஆகும். இதை பக்தியுடன் கேட்பவர் பன்னெடுங்காலம் சிவலோகத்தில் மகிழ்ந்திருப்பர் என்கிறார் சூதர்.
ஆதியும் அந்தமும் இன்றி, பிறப்பு இறப்பு இல்லாது, பேரொளியாக விளங்கும் ஜோதி வடிவிலிருந்து சகல லோகங்களுக்கும் ஆதாரமான லிங்கம் உண்டாயிற்று. அதனிடமிருந்து தோன்றியவர்களே பிர"மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகள். தமக்கென வித்து ஏதுமின்றி அனைத்துயிருக்கும் தாமே வித்தாகி வளர்ந்து விஸ்வரூபியான அப்பெருமானின் படைப்பே இப்பிரபஞ்சமாகிய மாயை. பஞ்ச பூதங்களும் அவனே. ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் ஆகிய ஐந்தும் அப்பெருமானுடைய முகங்கள்.
இந்நூலின் மூலம் சிருஷ்டி தத்துவத்தை அறியலாம். சிவலிங்க வழிபாடு செய்து தமது பாவங்களுக்கு கழுவாய் தேடிக் கொண்டவர்களின் சரிதங்கள் இதில் தரப்பட்டுள்ளன. சிவபெருமானின் அருள் பெற்று உய்ந்தவர்களின் எண்ணிக்கை விவரிக்க இயலாதது. என்றாலும், அப்பாக்கியம் பெற்ற பல முக்கிய புருஷர்களைப் பற்றி இந்நூலைப் படிப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.